காணி விடுவிப்புக்காக இராணுவத்துடன் ஆளுங்கட்சியினர் கடும் வாக்குவாதம்!
இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இராணுவத்துடனும் அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் ஆளுங்கட்சியினர் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய போதிலும் அவற்றை விடுவிப்பதற்கு இராணுவம் தொடர்ச்சியாகப் பின்னடித்தது.
இதையடுத்தே, காணிகளை விடுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன், யாழ். மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் உள்ளிட்ட தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கருத்தைத் தொடர்ந்தே பலாலி வீதி உள்ளிட்ட பல விடயங்களில் இராணுவம் விட்டுக்கொடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
