சுரேஷ் சலேயின் விசேட மனு: நாளை அறிக்கை சமர்ப்பிக்குக! – சி.ஐ.டிக்கு நீதிமன்றம் கட்டளை.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகளில் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனு தொடர்பாக நாளை வியாழக்கிழமை அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவசர அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்று புதன்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசேட பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கோட்டை நீதிவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பித்த மனுவின் உள்ளடக்கங்கள் மற்றும் தடுத்துவைப்புக் காவல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்த நீதிவான், இவ்விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உள்ளடக்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார்.

இதற்கமைய, குறித்த மனுத் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ள நீதவான், வழக்கின் மேலதிக விசாரணைகளையும் நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.