‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்!

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் இந்த விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறண்ட காலநிலை காரணமாக நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய நேரடிப் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் தடையின்றிச் சேமித்து வைத்தல் மற்றும் பொதுமக்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைப் பாதுகாப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது குறித்துச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தங்களின் சாத்தியமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் உடனடியாக வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவிட்டார்.

இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் மற்றுமொரு விசேட கூட்டத்தை எதிர்வரும் சில தினங்களுக்குள் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தினம், எல் நினோ காலநிலை சவாலை எதிர்கொள்வதற்கான துல்லியமான செயல்முறைத் திட்டங்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கு அமைச்சர்களால் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்களான லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் பின்வருமாறு சுட்டிக்காட்டினர்.

“கடந்த காலங்களில் எற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பேரழிவு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட சவால்களுக்கு அரசு வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளது. அதேபோன்றே, வெளிப்புற சவாலாக உருவெடுத்துள்ள இந்த உலகளாவிய காலநிலை மாற்ற நிலைமையையும் தங்குதடையின்றிச் சிறந்த முறையில் கையாள்வதற்கான முறையான திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்திடம் காணப்படுகின்றன.” – என்றனர்.

மேலும், இயற்கை அனர்த்தங்களை ஒருபோதும் முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க முடியாது என்றும், அதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு மோசமான சூழ்நிலைக்கும் முகம் கொடுப்பதற்காக நாடு எப்போதும் முன்கூட்டியே திட்டங்களை வகுத்துத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் வலியுறுத்தினார்.

இந்த முக்கிய அமர்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமஆரச்சி உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உயர்மட்டப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.