விசாரணைகளுக்குப் பயந்தே விமல், கம்மன்பில நாடகம்! – சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று பிரதியமைச்சர் பிரதீப் சாடல்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, அதற்கு விரோதமாகச் செயற்பட்ட சரத் பொன்சேகா மற்றும் ஷிராணி பண்டாரநாயக்க போன்றோருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள், இன்று சட்டம் தன் கடமையைச் செய்யும்போது கூச்சலிடுகின்றனர் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் குறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று இந்த நாட்டிலே சட்டம் என்பது அனைவருக்கும் சமமான முறையில் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகள் சரியான பாதையில் நகர்ந்து, அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணைகளின் மூலம் மேலும் பல குற்றவாளிகள் வெளிப்படுவார்கள், தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே, சிறைக்குச் செல்லவிருக்கும் குற்றவாளிகள் இணைந்து தற்போது இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவ்வாறான நாடகங்களை நாட்டின் பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாக்களும், அவர்களின் குடும்பங்களும் இன்று நீதிக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நீதியை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போதைய அரசாங்கம் உள்ளது.

அதேபோன்று, இந்த நாட்டிலே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் என அனைத்துத் தரப்பினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கான விசாரணைகள் நியாயமான முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோர் நாடகமாடுகின்றனர்.

யார் எதனைச் செய்தாலும், யார் கூக்குரலிட்டாலும் நிச்சயமாக நியாயமான முறையில் விசாரணைகள் தொடரும். சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்பதால், இக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.