பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி கோட்டா நீதிமன்றில் அவசர மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசேட பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகளின் அடிப்படையில், தன்னைத் தன்னிச்சையாகக் கைது செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, அவ்வாறு கைது செய்யப்படுவது சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும் தனது மனுவில் கோரியுள்ளார்.

அத்துடன், இந்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதற்கு எதிர்மனுதாரர்களுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.