கைது செய்வதைத் தடுக்கக் கோரும் கோட்டாவின் ரிட் மனு 24 இற்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்டநீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தனது தரப்பு நியாயங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.

மறுபுறம், இந்த மனுவில் பெயரிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் தரப்புச் சார்பாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாகப் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்:

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனு தொடர்பான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்வதற்கும் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.