ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம். ஐந்து பேரும் பிணையில் விடுதலை!

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம்.                            ஐந்து பேரும் பிணையில் விடுதலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல்காரர்களால் 12.09.2020 அன்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்ததுடன் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், முதலாம் இரண்டாம் சந்தேக நபர்கள் ஏற்கனவே பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றய தினம்(17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்களின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன் க.பார்த்தீபன் சி.துஸ்ஜந்தி உள்ளிட்ட சட்டவாளர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது பொலிசார் மற்றும் வனவளத்திணைக்களம் சார்பில் மேலதிக அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இவ் வழக்கின் நான்காம், ஐந்தாம் சந்தேக நபர்களுக்கு அடையாள அணிவகுப்பு தேவைப்பட்ட நிலையில் சம்பவ தினத்தன்று அவர்கள் அங்கிருந்ததை உறுதிப்படுத்தி ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

அதனடிப்படையிலும் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகள் காரணமாகவும் சந்தேக நபர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

குறிப்பாக வழக்கின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கவும் மற்றும் மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் ஒப்பமிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது. வழக்குத்தொடுனர் சாட்சியாளர்களுக்கான எந்த அச்சுறுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கையும் விடுவித்திருந்தார்.

தொடர்ச்சியாக இவ் வழக்கு விசாரணையினை மேற்கொள்ளவதற்கு பொலிசாரும் வனவளத் திணைக்களத்தினரும் சரியான விதத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

இவ் வழக்கின் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 02.02.2021ம் தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.