கொடூரமான படுகொலைகளைச் செய்துவிட்டு குற்றமற்றவர் எனக் கூறுவது வேடிக்கையானது! – பிள்ளையானை வறுத்தெடுத்த அமைச்சர் ஆனந்த விஜேபால.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொலைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர் என்றும், அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பிள்ளையான் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்போது தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கூறியிருந்தமை பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,

இது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளின் பின்னணியில் பிள்ளையான் இருந்துள்ளார் என்பது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இவ்வாறான கொடூரக் கொலைகளையும் குற்றச் செயல்களையும் புரிந்துவிட்டு, இன்று தான் முற்றிலும் குற்றமற்றவர் என்று அவர் கூறுவது மிகவும் வேடிக்கையானது.

அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவர் இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அத்தனை இரகசியங்களும், பழிவாங்கல் குற்றங்களும் இப்போது நீதிமன்றத்தின் மூலம் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன. சட்டத்தின் முன்னால் யாரும் தப்பிக்க முடியாது. இத்தனை காலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், பிள்ளையான் புரிந்த குற்றங்களுக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் மிக விரைவில் வழங்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.