மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பாதசாரி பரிதாபமாக மரணம்! – படுகாயமடைந்த ஓட்டுநர் வைத்தியசாலையில்..

அனுராதபுரம் மாவட்டம், கெக்கிராவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவ – யக்கல்ல வீதியில் இந்தச் சோகமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

கெக்கிராவ – யக்கல்ல வீதியில் யக்கல்ல நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பாதசாரியும் உடனடியாக மீட்கப்பட்டுத் தம்புள்ளை பொது வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதசாரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.