அரசு நிதி முறைகேடு: ரணிலுக்கு எதிரான வழக்கு செப். 30 வரை ஒத்திவைப்பு! – சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க அதுவரை அவகாசம்.

01. https://we.tl/t-77FXJzBtZ4efsmDS
02. https://we.tl/t-FTtF4T8uO26t3iXW

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அதற்கமைய, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன எனவும், அதற்கான கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து, சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன, அந்தக் கோப்புகள் மீதான சட்டமா அதிபரின் இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, வழக்குக்கு அடிப்படையாகக் கூறப்படும் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்தின் போது, அவருக்கான வாகனங்களை அந்த நாட்டு அரசே வழங்கியதாக அவர் வாதிட்டார். இது தொடர்பான பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ ஆவணங்களை அரச சட்டத்தரணியிடம் கையளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த வாகனச் செலவுகள் குறித்துத் தனியானதொரு முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்துக்கு வருகை தந்த போது, அவரது துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் அவருடன் வருகை தந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் நீதிமன்ற வருகையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் அங்கு குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.