கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் மணிக்கூண்டு இடிந்து விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

கோழிக்கோடு,

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் 2, 3-வது நடைமேடைக்கு நடுவே இருந்த மணிக்கூண்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன் கட்டிட இடிபாடுகள் 2-வது நடைமேடையின் மேற் கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை சேதமடைந்தது. மேலும் அந்த நடைமேடை தண்டவாளத்தில் நிறுத்தி இருந்த கோழிக்கோடு-கண்ணூர் பய ணிகள் ரெயில் பெட்டிகளின் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன. இதனால் ரெயில் பெட்டிகளும் சேதமடைந்தது.

இந்த ரெயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரெயில் பெட்டிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அங்கு பயணிகள் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே துறையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதிக்கு பயணிகள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் 1, 2, 3-வது நடைமேடைகள் மூடப்பட்டு, பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதோடு அந்த நடைமேடைகளுக்கு வரும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.