யாழ்ப்பாணம் நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30 இற்கும் மேற்பட்ட யாசகர்கள் வெளியேற்றம்!

யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.

யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலிலும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜாவின் கோரிக்கை மற்றும் யாழ். மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பஸ் நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் போதனா வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் யாசகம் என்ற போர்வையில் பொதுமக்களுக்கும், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களைக் கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து, அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது விவபரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, சிறுவர்கள் பலரும் யாசகம் பெறும் செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிறுவர்களின் பாதுகாவலர்கள் பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ். நகரின் அழகையும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு, இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.