அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி.

https://we.tl/t-HMDcQQahc4akYeER

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாட்டை அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று, சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மூன்று நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன. விதிகளின்படி, ஒரு கிலோகிராமுக்கு ஆகக்குறைந்த விலையான 179 ரூபாவைக் கோரிய நிறுவனத்துக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், அந்தத் தேர்வு இரத்துச் செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபா கோரியிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான தெரிவினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபா வீதம், அரசுக்கு மொத்தம் 3 கோடியே 31 இலட்சத்துக்கும் அதிகமான நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சிவில் புலனாய்வு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ‘சமல் ராஜபக்ஷ வேஸ்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ என இருந்த அந்த நிறுவனத்தின் பெயர் தற்போது ‘ஜி.எஃப்.சி’ என மாற்றப்பட்டுள்ளது என்று ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட இலாபத்துக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தகுதியான நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர்.

மருத்துவக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான விடயமாக இருப்பதால், இத்தகைய முறைகேடுகள் பெரும் அபாயங்களை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ள சிவில் புலனாய்வு முன்னணியினர், இது அப்பட்டமான பொதுப்பண ஊழல் என்பதால், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் உடனடியாகத் தலையிட்டு இந்த டெண்டரை இரத்துச் செய்து, அரசுக்கு ஏற்படவிருக்கும் நிதி நட்டத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, இது குறித்து ஜனாதிபதிக்கும் விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.