நாட்டில் தாண்டவமாடும் ‘டெங்கு’ 175 ஆக உயர்ந்த அபாய வலயங்கள் – நாளை முதல் விசேட நடவடிக்கைகள்.
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாளை திங்கட்கிழமை முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை தற்போது 175 ஆக உயர்ந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 10 நாள்களில் மட்டும் 11 ஆயிரத்து 764 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் (கடந்த ஜூன் மாதம் முழுவதிலும் 21 ஆயிரத்து 538 பேர் பதிவாகியிருந்தனர்).
இந்த வருடத்தில் இதுவரை 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் (ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 பேர்) பதிவாகியிருந்தனர். தற்போது நிலவும் பாதிப்பு விகிதம், மீண்டும் அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்று சுகாதாரப் பிரிவினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதன் மூலமும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
