சி.ஐ.டியினரின் தேடுதலின்போது அம்பலமான கொடூரம் ஆயிரக்கணக்கான தடிகளும் கூர்மையான ஆயுதங்களும் நீர்கொழும்பு சிறையில் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணைகளில், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கூர்மையான ஆயுதங்களைக் கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சமையலறையிலிருந்த தேங்காய்களை அதிகாரிகள் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமையும் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தக் கொடூர மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.