மின் கம்பத்தில் மோதிய மோ. சைக்கிள்! 29 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு!! – ஹொரணையில் துயரம்

களுத்துறை மாவட்டம், ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மில்லேவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹொரணை – மீபே வீதியில், மில்லேவ பகுதியில் வைத்து மீபே நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பமொன்றில் பலமாக மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பின்னால் பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான மில்லேவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.