சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வரும் 21 ஆம் திகதி!

சாவகச்சேரி நகர சபைக்குப் புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதுகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால் வறிதாக்கப்பட்டது.

அந்த வெற்றிடத்தை நிரப்பவே தற்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இதேநேரம் முன்னாள் உப தவிசாளரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை கோரி தாக்கல் செய்த மனு நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்மனுதாரர் தரப்பு தமது ஆட்சேபனையை இணைக்கச் சந்தர்ப்பம் வழங்கி வழக்கு 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.