72 ஆயிரத்தைத் தாண்டிய டெங்குத் தொற்றாளர்கள் – 49 பேர் பரிதாப உயிரிழப்பு.
இலங்கையில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் டெங்குத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் டெங்குத் தாக்கத்தால் 49 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய டெங்குப் பரவல் நிலைமை குறித்து வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவங்களின்படி, ஜூலை மாதத்தின் முதல் 15 நாள்களில் மட்டும் 17 ஆயிரத்து 51 பேருக்கு டெங்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகின்றது.
மாகாண ரீதியாகப் பார்க்கையில், மேல் மாகாணமே டெங்குத் தொற்றினால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு மாத்திரம் 38 ஆயிரத்து 160 பேர் டெங்கு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கும் சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் தமது சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
