சாவகச்சேரியின் புதிய பிரதி நகர பிதா தெரிவு 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ். சாவகச்சேரி நகர சபையின் பிரதி நகர பிதா கிஷோரை அந்தப் பதவியில் இருந்து விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் எதிர்மனுதாரர்களின் பதில் மனு தாமதமாகின்ற காரணத்தால் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்கின்றமை காலதாமதமாகின்ற காரணத்தால் புதிய பிரதி நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 21 ஆம் திகதியை 28 ஆம் திகதிக்குத் தாங்கள் ஒத்திவைப்பதற்கு எதிர் மனுதாரர் தரப்பு இன்று நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொண்டது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆயினும் எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்களைப் பெற வேண்டி இருப்பதால் இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனுவைத் தாக்கல் செய்யும்படியும், 24ஆம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைக்கு இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.