சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள்: ஜனாதிபதி தலைமையில் இன்று உயர்மட்டக் கலந்துரையாடல்.

சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, சிறைச்சாலை வசதிகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் அவற்றை விரிவுபடுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஜனாதிபதி விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்தச் சந்திப்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.