மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் போராட்டம்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்று வருகை தந்திருந்த நிலையில், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் செம்மணி வளைவுப் பகுதியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.




