பதுளை – உனுகல்ல தோட்டத்தில் முகாமையாளரை நீக்கக் கோரி தொடர் வேலைநிறுத்தம்! – இன்று விசேட பேச்சுவார்த்தை.

பதுளை, உனுகல்ல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய தோட்ட முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 5 நாள்களாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின் உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த், தனது வீட்டுக்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல் மாதம் தோட்ட முகாமையாளரிடம் கடிதம் வழங்கியிருந்தார்.

மூன்று மாதங்கள் கடந்தும் பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் திகதி அது குறித்து வினவுவதற்காகச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் சாணக்க தன்னைத் தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், தாக்குதலுக்குள்ளான இளைஞர் அன்றைய தினமே ஹாலிஎல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், முகாமையாளர் சாணக்கவை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், உனுகல்ல தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அத்துடன், தோட்டக் காரியாலயத்தில் உள்ள அதிகாரிகள் மக்களுக்குச் சரியான சேவைகளை வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 20 ஆம் திகதி தோட்டத்தின் உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்திற்கு வருகை தந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காகப் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.