அதிக முதலீட்டு உதவியை சீனா வழங்கும் என்றார் தூதுவர்!

‘முதலீடுகளே தேவை: கடன் அல்ல’ என்றேன் நான்; அதிக முதலீட்டு உதவியை சீனா வழங்கும் என்றார் தூதுவர்!

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் என்னைச் சந்தித்து தனது நியமனப் பத்திரத்தைக் கையளித்தார்.

அப்போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து எனது மகிழ்ச்சியை நான் அவரிடம் தெரிவித்தேன்.

”குறிப்பாக பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சீனா பெரிதும் உதவியது.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவை அவற்றில் சிலவாகும்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பை சிலர் விமர்சித்தனர்;

இந்த திட்டங்கள் பயனற்றவை என்பது அவர்களின் வாதம். ஆனால், உண்மை அதுவல்ல.

சீனாவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அதிக வருமானம் மற்றும் தொழில் வாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

எனது பொறுப்புக்காலம் முடிவதற்குள் இந்த திட்டங்களின் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்” என்பதனை நான் அவரிடம் கூறினேன்.

இலங்கையானது தனது அபிவிருத்தி முயற்சிகளில் மேலும் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக முதலீட்டை ஈர்ப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளது என்பதையும் நான் தெரிவித்தேன்.

“எமது நாட்டில் பரந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

விவசாயம், தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அவற்றில் முக்கியமானவை.

இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 30 வீதமானவர்களின் வாழ்வாதாரம் கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக சீனா அடைந்துள்ள கிராமிய அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது முக்கிய குறிக்கோள்.

அதைச் செய்ய எங்களுக்கு உதவுங்கள்” என்று நான் புதிய சீன தூதுவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இதற்கு பதிலளித்த சீன தூதுவர் கியி சென்ஹோங் – இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி முயற்சிகளின் வெற்றிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க தனது அரசாங்கம் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்களின் வாழ்த்துக்களை என்னிடம் தெரிவித்த தூதுவர் சென்ஹோங், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதும்,

அபிவிருத்தி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று கூறினார்.

“நீங்கள் பதவியேற்ற பிறகு, இலங்கை மக்களை ஒன்றிணைத்தீர்கள். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளீர்கள்.

கோவிட் 19 அச்சுறுத்தல் வந்தபோது, இலங்கை அரசாங்கமும் மக்களும் அதை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை நாங்கள் கண்டோம்” என்று புதிய தூதுவர் பராட்டுக் கூறினார்.

இலங்கையானது ஒரு வளமான நாடாக எழுந்திருப்பதைக் காண்பதே சீனாவின் விருப்பமாகும் என்றும் அவர் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, எனது செயலாளர் பி. பீ ஜயசுந்தர, வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சீன தூதரகத்தின் துணைத் தலைவர் ஹு வெய் (Hu Wei) மற்றும் அரசியல் பிரிவின் தலைவர் லுஓ சோங் (Luo Chong) ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.