மகாராஷ்டிரா நாசிக்கில் தொடர் நில அதிர்வு: வீடுகளில் விரிசல், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, நேற்று (08) இரவு 10 மணியளவில் நாசிக் மாவட்டத்தில் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

வீடுகளின் சுவர்களில் விரிசல்கள்
இதனைத் தொடர்ந்து நேற்று (09) அதிகாலை 5.33 மணியளவில் 3.3 ரிச்டர் அளவிலான நில அதிர்வும் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா – குஜராத் எல்லைக்கு அருகிலுள்ள ஹட்காட் மலைத்தொடரை அண்டிய பன்வாட் பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வின் மையம் அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாசிக் நகரம் மற்றும் சுர்கானா, கல்வான், தேவலா, சந்தவாட், பேத், திண்டோரி, நிபாட் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

சுர்கானா தாலுகாவில் உள்ள பாதர் மற்றும் திண்டோரி தாலுகாவில் உள்ள நானாஷி ஆகிய கிராமங்களில் சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. அப்பகுதியில் உள்ள அணைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், வதந்திகளை நம்பாமல் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.