22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்! – யார் என்ன கூச்சலிட்டாலும் அதை எவராலும் தடுக்கவே முடியாது என்றும் அமைச்சர் முழக்கம்.

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார் என்ன கூச்சலிட்டாலும் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் பெரியவர், சிறியவர் அல்லது பணக்காரர் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதன் காரணமாகவே, பழைய ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கூச்சலிட்டு வருகின்றனர். நீதிமன்றச் சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலையை மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக வரலாற்று ரீதியாக மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2026ஆம் ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 1.3 டிரில்லியன் ரூபாவும், அடுத்த ஆண்டில் 2 டிரில்லியன் ரூபாவும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வீடுகள், வீதிகள், பாடசாலைகள் மற்றும் குளங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக்கப்படும்.

கடந்த காலத்தில் போதைப்பொருள், பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் ஊழல் போன்றவையே ஊக்கவிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அரசு அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்திச் சட்டத்தை நிலைநாட்டி வருவதால், கட்சிப் பேதங்களைக் கடந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.