“எங்கள் நிலங்கள் எப்படி உங்களுடையதாகும்?” – பலாலி மக்களின் பூர்வீகக் காணி மீட்புப் போராட்டம் 11ஆவது வாரமாகத் தொடர்ச்சி.

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்? அரச நாடாளுமன்ற உறுப்பினர்களே! மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறி வாக்குப் பிச்சை கேட்டு வந்தீர்கள், வெற்றி பெற்றதும் உங்களுக்கு வாக்களித்த மக்களை மறந்துவிட்டீர்கள்” என்ற வலுவான கோஷங்களை முன்வைத்து, வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் 11ஆவது வாரமாகவும் இன்று தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெற்று, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காணி உரிமையாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பலாலி சந்தியை அண்மித்த பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், பல தசாப்தங்களாகத் தமது காணிகளை இழந்து சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ நேர்ந்துள்ளதாகக் கவலை வெளியிட்ட மக்கள், “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?” போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தேர்தல் காலங்களில் காணிகள் மீள வழங்கப்படும் எனக் கூறி வாக்குக் கேட்டு வெற்றிபெற்ற அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் பிரச்சினையை மறந்துவிட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாகச் சாடினர்.

தமக்குச் சொந்தமான நிலங்களை விடுவிப்பது வெறும் காணி உரிமைப் பிரச்சினை மட்டுமல்லாமல், அது தங்களது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அரசு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும், உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் காணி இழந்த பலாலி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.