10 நிமிட தாமதம்… உயிரைக் காத்த தேநீர் இடைவேளை! நேபாள வெள்ளத்தில் தப்பிய 5 இந்தியர்கள்

ராஞ்சி,

ராய்ப்பூரை சேர்ந்த 5 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 10 முதல் 15 நிமிடங்கள் முன் சென்று இருந்தாலோ, விரைவாக கிளம்பி இருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தினர்
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர் கடந்த 22-ந்தேதி நேபாளத்துக்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா சென்ற 5-வது நாளான 26-ந் தேதி தாடிங் என்ற மாவட்டத்தில் உள்ள மலேகு என்ற இடத்தில் காலை 10 மணியளவில் ஒரு விடுதியில் டீ குடிப்பதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இந்தநிலையில்தான், நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்த நாட்டையே உருக்குலைத்தது. விடுதிக்குள் டீ குடித்த போது, அப்பகுதி மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதை இவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் டீ குடிக்க இடைவெளி எடுத்து கொண்டதால் உயிர் தப்பினர். 10 முதல் 15 நிமிடங்கள் முன் சென்று இருந்தாலோ, விரைவாக கிளம்பி இருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக்கூடும்.

நேற்று முன்தினம் வீடு திரும்பினர்
அவர்கள் 5 பேரும் 2 நாட்களாக அவர்கள் சென்ற வாகனத்திலேயே உறங்கியும், அந்த 2 நாட்களில் வெள்ளத்தின் கோர தாண்டவத்தை வாகனத்தில் அமர்ந்து குலைநடுக்க பார்த்ததாகவும் தெரிவித்தனர். அந்த இக்கட்டான சூழலில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் பெண் பாதுகாப்பு பணியாளர்கள் தங்களுக்கு ராக்கி கயிறு கட்டியது மிகுந்த ஆறுதலை அளித்ததாக அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

Leave A Reply

Your email address will not be published.