இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நாமல் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான ‘எயார்பஸ்’ விமானக் கொள்முதல் தொடர்பான சர்ச்சை மற்றும் ஊழல் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று காலை 9 மணிக்கு அவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல மில்லியன் டொலர் இலஞ்சப் பணப் பரிமாற்றம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
