22ஆவது திருத்தம் அநுர அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்! – மொட்டுக் கட்சி எம்.பி. சானக பகிரங்க எச்சரிக்கை.

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியதாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு தனது இயலாமையை மறைப்பதற்காகவே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆரம்பத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலாக்கியவர்கள், தற்போது நீதித்துறைக்கு அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். ஏகாதிபத்திய நடவடிக்கை ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகின்றார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பது அரசுக்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், சுயாதீன நிறுவனங்களை அடக்கும் செயற்பாடுகளிலேயே குறியாக உள்ளனர்.

அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரிவரும் நிலையில், எதனையும் பொருட்படுத்தாமல் இந்த 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அரசின் இத்தகைய திட்டங்களை நீதிமன்றத்திலும் வீதிகளிலும் தோற்கடிக்க மக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.