முல்லைத்தீவில் உலக மீனவர் தின நிகழ்வு.

முல்லைத்தீவில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், உலக மீனவர் தின நிகழ்வு 21.11.2020 அன்று இடம்பெற்றது.

‘நீல பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மக்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பலமான சமூக இயக்கத்தைக் கட்டி எழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவைச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தற்காலத்தில் சட்டவிரோத தொழில்களாலும், வெளிமாவட்ட மற்றும், இந்தியமீனவர்களின் அத்துமீறல்களாலும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள இடர்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டன.அத்தோடு அவ்வாறு மீனவர்கள் எதிர் நோக்கும் இடர்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதுதொடர்பிலும் பேசப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வின் இறுதியில், முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைத் தீர்த்துவைக்குமாறு கோரி மாவட்ட மீனவர்களின் சார்பில் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

அந்தவகையில் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சமேளனம், என்பவற்றின் சார்பில், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர், மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரிடம் இவ்வாறு மகஜர்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

 

Leave A Reply

Your email address will not be published.