மார்ச் மாதத்துக்குப் பின்பே இலங்கையில் விமான நிலையத்தை திறக்கும் சாத்தியம்

மார்ச் மாதத்துக்குப் பின்பே இலங்கையில்
விமான நிலையத்தை திறக்கும் சாத்தியம்

ராஜபக்ச அரசு அறிவிப்பு

அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குப் பின்னரே விமான நிலையத்தை திறக்க முடியுமாக இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

தற்போது அத்தியாவசிய விமான சேவைகள் நடைபெறுகின்ற போதும், அதனைத் தவிர்ந்து வேறெந்த விமான சேவைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு இறுதியில் விமான நிலையங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு விமான நிலையத்தைத் திறக்கும் நடவடிக்கையைப்  பிற்போடுவதற்கு ஆராய்ந்து வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் காமினி லொக்குகேவிடம் கேட்டபோது, நாட்டின் விமான நிலையத்தைத் திறக்க இன்னமும் எந்தத் தீர்மானம் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில் இந்த ஆண்டு இறுதிவரை விமான நிலையங்களைத் திறக்க முடியாது என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் பொதுப் போக்குவரத்தை சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளுடன் முன்னெடுத்துச் செல்கின்ற போதும், விமான சேவைகளை அவ்வாறு முன்னெடுப்பது முடியாத நிலைமையே காணப்படுகின்றது என்றும்,  எப்படியும் மார்ச் மாதத்துக்குப் பின்னரே அதனைத் திறக்க முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய விமான சேவைகள் தவிர்ந்த ஏனைய சகல விமான பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் இப்போதைக்கு விமான சேவைகள் வழமைக்கு திரும்பாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.