170 மில்லியன் ரூபா செலவில் வவுனியா பொது மருத்துவமனையில் தாதியர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா – சுகாதார அமைச்சர், வடக்கு ஆளுநர் பங்கேற்பு.

“சுகாதார சேவைக்குத் தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அவசியமானவை. ஆனால், அவற்றை இயக்குகின்ற மனித வளமே சுகாதார சேவையின் உயிர்நாடியாகும். குறிப்பாக நோயாளிகளுடன் மிக நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களுக்குச் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவது, தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் 170 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள தாதியர் உத்தியோகத்தர்களுக்கான விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் பங்கேற்றார்.

வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையின் வரலாற்றில் முக்கியமான மற்றுமொரு முன்னெடுப்பாக இத்திட்டம் அமைவதாகத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதார உதவியாளர் நியமனங்கள் இடம்பெறாத நிலை காணப்பட்ட நிலையில், 300 சுகாதார உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, சுகாதார நிறுவனங்களுக்கு தேவையான மனிதவள ஆதரவாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

வவுனியா மருத்துவமனை வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள முக்கிய மருத்துவமனையாக இருப்பதால், அதன் அபிவிருத்தி வவுனியா மாவட்டத்துக்கான முன்னேற்றம் மாத்திரமன்றி, வடக்கு மாகாணத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சுகாதாரத் தேவைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் விடயங்களை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெறுமனே கேட்டறிந்து செல்வதற்கு அப்பால், அவற்றை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்காக அமைச்சருக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

தாதியர் உத்தியோகத்தர்களின் பணிச்சூழல் அவர்களின் சேவைத் தரத்திலும் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடியது என்று தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய இளம் பெண்கள் தாதியர் சேவையில் இணைவதற்கான ஆர்வம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதால், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த தாதியர்கள் வடக்கு மாகாண மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தமது சொந்தப் பிரதேசங்களிலிருந்து தொலைதூரம் வந்து சேவையாற்றும் அவர்களுக்கு தேவையான தங்குமிட மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாகாணத்தின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய தாதியர் நியமனங்களுடன் சிலர் இடமாற்றம் பெற்று வெளியேறுவதால் மொத்த மனிதவளத்தில் எதிர்பார்க்கப்படும் அளவிலான அதிகரிப்பு ஏற்படாத நிலையும் காணப்படுகின்றது என்று குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தின் உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்டு தாதியர் நியமனங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள தாதியர் விடுதி கட்டடத்தை நான்கு மாடிகளைக் கொண்டதாக அமைப்பதற்கான கோரிக்கையை ஆளுநரிடம் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், குறித்த கோரிக்கையை நிதி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்து, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான மருத்துவ உபகரணங்கள் தொடர்பான விரிவான விவரங்களைச் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வைத் தொடர்ந்து ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளின் நிலைமைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் நேரடியாகக் கவனம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனைக் குழாத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில், மருத்துவமனை எதிர்நோக்கும் பல்வேறு தேவைகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக ஆளணி தேவைகள், மருத்துவமனையின் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய மகப்பேற்று மருத்துவமனைக் கட்டடத் தொகுதியை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பிரதம விருந்தினரும் அழைக்கப்பட்ட விருந்தினர்களும் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பாரம்பரிய விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தாதியர் உத்தியோகத்தர்களுக்கான விடுதி கட்டடத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனை வளாகப் பார்வை இடம்பெற்றதுடன், ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையின் செயற்பாட்டு முன்னேற்றம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான விளக்கமும், செயற்பாட்டு சவால்கள் மற்றும் எதிர்கால முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.