மட்டக்களப்பில் நினைவேந்தல் தடையை மீண்டும் உறுதிப்படுத்தியது நீதிமன்றம்!

மட்டக்களப்பில் நினைவேந்தல் தடையை மீண்டும் உறுதிப்படுத்தியது நீதிமன்றம்!

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை – மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைத் தடுக்கும் வகையில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் பெறப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து நினைவேந்தல் தடையை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைத் தடுக்கும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரனின் வீட்டுக்கு சென்று வழங்கப்பட்டிருந்தது.

அதில் இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரனோ – அவர் கட்சி சார்ந்தவர்களோ – ஏனையோர்களோ அவ்வாறான நினைவேந்தல் நிகழ்வு நடத்தவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுத் தொல்லைகளைத் தவிர்த்தல், தணித்தல் என்கின்ற குற்றவியல் சட்டக்கோவையின் 106:01 பிரிவின் கீழ் இந்தத்  தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கக் கோரி கடந்த 24ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரியநேத்திரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத், சட்டத்தரணி சயந்தன் உட்பட 27 சட்டத்தரணிகள் அன்று ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்ததுடன் பொலிஸார், குறித்த நினைவேந்தல் நிகழ்வு விடுதலைப்புலிகளை மீளுருவாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு எனவும், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை எவரும் மீறவே முடியாது எனவும் காரணங்களை முன்வைத்து வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இந்தநிலையில், குறித்த வழக்கை இன்று வரையில் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் மீண்டும் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிவான் ஏ.சி.றிஸ்வானால் ஏழு பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கை வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தடை உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.