அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசு தயாராம்! சமல் கூறுகின்றார்

அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசு தயாராம்! – சமல் கூறுகின்றார்.

“புரவி சூறாவளியின்போது மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கே அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”

– இவ்வாறு நீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்‌ச தெரிவித்தார்.

புரவி சூறாவளியால் இலங்கையில் ஏற்படக் கூடிய அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாகச் செயற்படக் கூடிய வகையில் மீட்புக் குழுக்கள், நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

மேலும், அனர்த்தங்களால் இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தேவையான நிதிகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

சூறாவளி எச்சரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அமைச்சர் சமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்படும் முகாம்களில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் வகையில் விசேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.