முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.

இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. இதன்னடி 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி ஆர்சி 34 ஓட்டங்களிலும், அணித் தலைவர் ஆரோன் பின்ச் 35 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.  சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர். இதற்கடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 12 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜனின் யார்க்கர் பந்துவீச்சில் டி ஆர்சி( 34 ஓட்டங்கள்), க்ளென் மேக்ஸ்வெல்( 2 ஓட்டங்கள்) மற்றும் மிட்செல் ஸ்டார்க்(1 ஓட்டம்) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் நடராஜன் தனது சர்வதேச டி-20 விக்கெட் கணக்கை துவங்கியுள்ளார்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.