வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம்: இரண்டு குழந்தைகளின் உயிர் காவு!

வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம்:
இரண்டு குழந்தைகளின் உயிர் காவு!

மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய் ஒருவர், 7 வயது மற்றும் ஒரு வயதுக் குழந்தைகளுடன் வீதிக் கடவையில், வீதியைக் கடக்க முயற்சித்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும், பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த கர்ப்பிணித் தாய் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு வேளையில் நாளாந்தம் குறித்த பகுதியில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர் என்று பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

பிரதான வீதியில் அதி வலுக் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் சிலர் நாளாந்தம் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர் எனவும், இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.