ஒன்றுபட்டு எமது விடுதலைக்கு அனைவரும் வழிசமையுங்கள்!: தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

ஒன்றுபட்டு எமது விடுதலைக்கு அனைவரும் வழிசமையுங்கள்!: தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

“அரசமைப்பின் பிரகாரம் சிறைக் கைதிகளின் விடயத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்தவகையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர் பட்டியலுக்குள் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்வாங்குமாறு, அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் தனித்தனியான கருணை மனுக்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு முன்வைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன்மூலம் எமக்கும் சமூகத்துடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எம்மைப் பிரிந்து நித்தமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் கண்ணீருக்கும் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கின்றோம்.”

– இவ்வாறு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் இன்றிரவு வெளிவந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது என அறியமுடிகின்றது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதற்கும் மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாகச் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி அனைத்து சிறுபான்மைத் தரப்பினரும் கட்சி, அரசியல், பிரதேச வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மனித நேயத்துக்கு மதிப்பளித்து கொள்கையளவில் ஒன்றுபட்டு எமது விடுதலைக்கு வழிசமையுங்கள் என விநயமுடன் வேண்டுகின்றோம்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையே வாழ்க்கை எனச் சீரழிந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம் உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு நிகழ்காலத்தை நகர்த்துகின்றோம். நாட்டில் தேர்தல்கள் வருகின்றபோதும், ஆட்சி அதிகாரங்கள் மாறுகின்றபோதும் எங்களது சிறை வாழ்வுக்கு விடிவு பிறக்கும் எனக் கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போனது.

விடுதலையை வலியுறுத்தி நாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோதெல்லாம் திறந்த வாக்குறுதிகளும், தீராத நோய்களுமே எமக்கு மிஞ்சிப்போனது. இதுவரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு எம்மோடு சிறையிருந்த 10 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அதுதவிர சிறை வன்முறைகளின்போது நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். தற்போது உயிர்க்கொல்லித் தொற்று நோயான கொரோனா சிறைக் கொத்தணியாக மாறி ஆயிரக்கணக்கான கைதிகளை அச்சுறுத்துவதுடன், சில உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றது.

எமது குடும்ப உறவுகள் உழைக்கும் கைகளை இழந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது பிள்ளைகள் தந்தையரின் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். வயதான எமது பெற்றோர் தமது இறுதிக்காலத்திலாவது ‘என் பிள்ளை கொள்ளியிட உயிரோடு வருவானா?’ எனக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். எனவே, சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள எமது விடுதலைக்கு வழிசமைக்க அனைவரும் முன்வாருங்கள்.

இன்று சிறைகளில் வாடுகின்ற நாம் சுகபோகமாக வாழத் தெரியாமல் சிக்குப்பட்டுப் போயிருப்பவர்கள் அல்லர். எமது சொந்த சுயநல இலாபத்துக்காகச் செயற்பட்டு நாம் சிறைக்கு வந்தவர்கள் அல்லர் என்பதைத் தயவு செய்து சற்றுப் புரிந்துகொள்ளுங்கள்.

மூன்றரை கால போர் முடிவுறுத்தப்பட்டு 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு தசாப்தமொன்று கடந்துள்ள நிலையிலும்கூட, 20 வருடங்களாகச் சிறையிருக்கும் எமது விடுதலை வாசல் திறக்கப்படவில்லை என்பது பெரும் துக்கமல்லவா?

எனவே, சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக நல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்புக்களும் அரசியல் கைதிகளான எமது விடுதலை விடயத்தில் தத்தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அரசமைப்பின் பிரகாரம் சிறைக் கைதிகளின் விடயத்தில் தீரமானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்தவகையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர் பட்டியலுக்குள் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்வாங்குமாறு, அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தனித்தனியான கருணை மனுக்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு முன்வைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதன்மூலம் எமக்கும் சமூகத்துடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எம்மைப் பிரிந்து நித்தமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் கண்ணீருக்கும் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.