மருதனார்மடம் கொரோனா கொத்தணி 58 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் 19 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட 114 வியாபாரிகளின் மாதிரிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 13 வியாபாரிகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவிலைச் சேர்ந்த 6 பேரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 3 பேரும், நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த தலா 2 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெல்லிப்பழையைச் சேர்ந்த 6 பேருக்கே இன்று மாலை கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 100 பேரின் மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக
மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதற்கமைய இன்று மாலை வெளியிடப்பட்ட முடிவுகளில் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி ஓட்டோ தரிப்பிடத்தில் சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியான அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் ஓட்டோ சாரதியாகவும் உள்ள 38 வயது குடும்பஸ்தர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

அதையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையிலுள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

மறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த நாள் திங்கட்கிழமை 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இந்தநிலையில், இன்று செவ்வாய்க்கிழமை 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று செவ்வாய்க்கிழமை வரையான 5 நாட்களில் 58 பேர் மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.