வடக்கில் கொரோனா பரவ மக்களே காரணம்; இங்கு இன்னும் கொத்தணி உருவாகவில்லை.

வடக்கில் கொரோனா பரவ மக்களே காரணம்; இங்கு இன்னும் கொத்தணி உருவாகவில்லை.

 இப்படிக் கூறுகின்றார் ஆளுநர் சார்ள்ஸ்

“வடக்கு மாகாணத்தில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்  இன்று ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் வழங்கத் தவறியமையே கொரோனாத் தொற்றுப் பரவலுக்குக் காரணம்.

மருதனார்மடம் தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், தொற்றாளர்கள் அதிகமாகவுள்ள இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொதுமக்களுக்கு ஒரு அறிவித்தலை வழங்கியிருந்தேன். வெளியிடங்களிலிருந்து யாராவது உங்கள் பிரதேசங்களுக்கு வந்தால் அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்குமாறு.

ஆனால், இந்த அறிவிப்பு தொடர்பில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழையாமையே இன்று தொற்றுப் பரவுவதற்கு ஏதுவாகிவிட்டது.

வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை. ஆகவே, மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொற்றிலிருந்து தம்மையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.