செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரன் தெரிவு.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவால் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரன் தெரிவு.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுப்பையா ஜெகதீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளுகைக்குள் இருந்த செட்டிகுளம் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோல்வி அடைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து வரவு – செலவுத்திட்டத்தை தோற்கடித்திருந்தன.

இந்தநிலையில், புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சு.ஜெகதீஸ்வரனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஏற்கனவே தவிசாளராகப் பதவி வகித்த ஆ.அந்தோணியின் பெயரும் முன்மொழியப்பட்டது.

தெரிவுக்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சு.ஜெகதீஸ்வரன் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஆதரவாகக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஓர் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓர் உறுப்பினரும் என 10 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான ஆ.அந்தோணி 6 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார். அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஓர் உறுப்பினர் நடுநிலைமை வகித்திருந்தார்.

இந்தநிலையில், மூன்று வருடங்களின் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவால் செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சு.ஜெகதீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.