இனவாதிகளின் கொக்கரிப்புக்கு அடிபணியாது  மாகாண சபை முறையை மேலும் பலப்படுத்துக!

இனவாதிகளின் கொக்கரிப்புக்கு அடிபணியாது  மாகாண சபை முறையை மேலும் பலப்படுத்துக!
அரசிடம் வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து.

“புதிய அரசமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும். அதைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கக்கூடாது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் உண்பதற்காக மட்டுமே வாய்திறக்கவேண்டும், அவர்களுக்கு ஒருபோதும் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்ற மமதையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகள், அரசமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது, அம்முறைமை நீக்கப்பட வேண்டும் என மீண்டும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

புதியதொரு அரசமைப்பு இயற்றப்படவுள்ள சூழ்நிலையில், மாகாண சபை முறைமைக்கு எதிராக அரசின் அனுசரணையுடன் இயங்கும் இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை புதிய அரசமைப்பின் ஊடாகப் பலவீனப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றதா என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும், மாகாண சபைகள் முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் எனத் தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்களின் உரிமைக் குரலை நசுக்குவதற்காக – ஒடுக்குவதற்காக அரசு, திட்டமிட்ட அடிப்படையில் இனவாதிகளைக் களமிறங்கியுள்ளதா என்ற வினாவும் எழுகின்றது.

அதேவேளை, தம்வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. பெரும்பான்மை இன மக்களை இயக்கக்கூடிய இனவாத சக்திகள் உள்ளன என்ற நம்பிக்கையில் அரசு, மாகாண சபை முறைமையில் கைவைக்கும் பட்சத்தில் அது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இராஜதந்திர மட்டத்திலான நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிவரும்.

எனவே, மாகாண சபை முறைமையில் கூடிய விரைவில் அரசு நடத்த வேண்டும். அதன்பின்னர் புதிய அரசமைப்பு ஊடாக மாகாண சபை முறைமையைப் பலப்படுத்த வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.