கொரோனாத் தொற்று ஏற்படாதவாறு நத்தார் பண்டிகையைக் கொண்டாடுக.

கொரோனாத் தொற்று ஏற்படாதவாறு
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுக.

யாழ். மாவட்ட மக்களிடம் பொலிஸ் வேண்டுகோள்.

“யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு நத்தார் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.”

– இவ்வாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்

யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ் மாவட்டத்தில் தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள். எனவே, இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய காலமாகவுள்ளது.

அதிலும் குறிப்பாக எதிர்வரும் நாட்களில் நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள் வருகின்றன. பொதுமக்கள் நாட்டில் உள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி தங்களுடைய கொண்டாட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது வீடுகளிலேயே குறித்த கொண்டாட்டங்களைக் கொண்டாடுங்கள் வெளியே செல்ல முயற்சிக்காதீர்கள். நத்தார், புதுவருடக் கொண்டாட்டங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களமும்  சில சுகாதார நடைமுறைகளை அறிவித்துள்ளது.

அத்தோடு தேவாலயங்களில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் ஆலய பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்துப் பொதுமக்களும் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடுதலைத் தவிர்க்கவேண்டும். கடந்த வருடக் கொண்டாட்டங்களைப் போலல்லாது இம்முறை தற்போது உள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ்வருட நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களைச் செயற்படுத்துங்கள். கொரோனாத் தொற்று மேலும் பரவாது தடுப்பதற்கு நாம் அனைவரும் சுகாதாரப் பகுதியினருக்கு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.