ஆரம்பப் பிரிவு பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிகளையும் மற்றும் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில், எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி முதல் முன்பள்ளிகளும், தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனாத் தொற்று நிலைமையால் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் முன்பள்ளிகளும், அனைத்துப்  பாடசாலைகளும் மூடப்பட்டதுடன், அதன்பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி முதல் மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரம் பாடசாலைகள் திறக்கப்பட்டன.

ஆனபோதும் பாடசாலைகள் திறக்கப்பட்ட சில பிரதேசங்களில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அந்தப் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,

“தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் மீண்டும் திறக்கப்பட்டு மூடப்பட்ட பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். இது தொடர்பாக பின்னர் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை இப்போதைக்குத் திறக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது” – என்றார்.

இதேவேளை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.