விக்கி புலம்புவதை நிறுத்த வேண்டும்! : சரத் வீரசேகர

விக்கி புலம்புவதை
நிறுத்த வேண்டும்!

தமிழருக்கெனத் தனி அதிகாரம் இல்லை என
கோட்டாவின் சகா சரத் வீரசேகர சண்டித்தனம்

“விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் எனப் புலம்பித் திரிகின்றனர். இந்தப் புலம்பலை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

“அதிகாரங்கள் பொதுவானவை. அவை அனைத்தும் மத்திய அரசின் கீழேயே இருக்க வேண்டும். அவற்றை ஒவ்வொரு மாகாணங்களுக்கென அல்லது தமிழ் மக்களுக்கென அல்லது முஸ்லிம் மக்களுக்கென பிரித்து வழங்க முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘மாகாண சபை முறைமை தேவையற்றது எனக் கூறிவரும் அமைச்சர் சரத் வீரசேகர, அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை. இதை மீறி 9 மாகாணங்களில் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின் ஜனாதிபதியின் கொள்கை பொய்யாகிவிடும். எனவே, மாகாண சபை முறைமை தேவையில்லை.

மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கின்றேன். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக  மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டபோது அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்து வெளியிட்டு வருகின்றேன். இதை உணராமல் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் எனப் புலம்பித் திரிகின்றனர். இந்தப் புலம்பலை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.