அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புறமாகவுள்ள நல்லை ஆதீன முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவர்களின் உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

எமது உறவுகளின் விடுதலைக்காக இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்தப் போராட்டத்தில்
கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தைக் கருத்தில்கொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றியும், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.