நல்லூர் பிரதேச சபையையும் இழந்தது தமிழ்க் கூட்டமைப்பு.

நல்லூர் பிரதேச சபையையும்
இழந்தது தமிழ்க் கூட்டமைப்பு.

முன்னணியின் மயூரன் தவிசாளராகத் தெரிவு

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருந்த நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவைகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தவிசாளர் தா.தியாகமூர்த்தி தனது
பதவியை இழந்திருந்தார். இந்தநிலையில், பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (ரெலோ) சார்பில் குமாரசாமி மதுசுதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பைப் பகிரங்கமாக நடத்துவதா அல்லது இரகசியமாக நடத்துவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர்கள் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

இதன்படி மதுசுதன் 08 வாக்குகளையும், மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர்.

மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஓர் உறுப்பினரும் வாக்களித்தனர்.

மயூரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) 3 உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுவின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும் மற்றும் தமிழர் விடுதலைக்  கூட்டணியின் ஓர் உறுப்பினரும் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினரும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.

அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.