யாழ். பல்கலை மருத்துவபீட மாணவனுக்குக் கொரோனா 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்த வாரம் மரணச் சடங்கு ஒன்றுக்காக மாத்தளைக்குச் சென்று திரும்பியிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

அவருடைய தாயாருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என மாத்தளை சுகாதாரத் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களத்தினருக்கு இன்று வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக மாணவனுக்கு உடனே விசேடமாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் நல்லூரில் வாடகைக்குக் குடியமர்ந்திருந்தார் எனவும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என 6 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கேதீஸ்வரன் கூறினார்.

அவர்கள் உணவருந்தச் செல்லும் உணவகம் உடனடியாக மூடப்பட்டு அதனை நிர்வகிப்பவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தத் தகவல் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்துக்குப் பொதுச்சுகாதார உத்தியோகத்தரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே கேதீஸ்வரன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.