நாடு திரும்பும் இலங்கையர்களை  எதிரிகளாகப் பார்க்க வேண்டாம்! ஜே.வி.பி. வலியுறுத்து.

நாடு திரும்பும் இலங்கையர்களை 
எதிரிகளாகப் பார்க்க வேண்டாம்!
ஜே.வி.பி. வலியுறுத்து.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை இராணுவக் கண்ணோட்டத்தில் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிரியைத் தனிமைப்படுத்தல், ஒதுக்குதல் என்பன போர்த்தந்திரங்களாகும் என்றும், அந்தக் கண்ணோட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களைப் பார்க்கக் கூடாது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதால், கொரோனா நோயாளர்கள் கூட எதிரிகளாகத் தென்படலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வெளிநாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர் ஒருவரிடம் ஹோட்டலில் ஒரு நாளைக்குத் தங்குவதற்கு 12,500 ரூபா அறவிடப்படுகின்றது. 14 நாட்கள் ஒரு நபர் ஹோட்டலில் தங்கியிருக்க ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது.

அதேபோன்று, விமானப் பயணச் சீட்டின் விலை 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு, நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவுசெய்துகொள்ள பணம் அறவிடப்படுகின்றதால் ஒரு நபர் இலங்கையில் தனிமைப்படுத்தல் காலத்தில் மாத்திரம் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட வேண்டியுள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்கள் அரச தனிமைப்படுத்தல் நிலையங்களில் இட வசதிகள் இல்லாமையால் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்கு மாற்றீடாக நாடு திரும்பும் இலங்கையர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.