பொங்கல் தினத்தில் விபத்து ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்றைய பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை(14) மாலை இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்பவங்களில் ஒருவர் மரணமடைந்ததுடன் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

எருவில் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்தபோது களுதாவளை கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றின்மீது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் அருகருகே இருந்த இருகடைகளின் முன்பகுதி உடைபட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு வந்தவர்கள், உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதில் காயமுற்ற 4 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் களுவாஞ்சிக்குடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வான் அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென களுதாவளை பிரதான வீதியில் குறுக்கீடு செய்ததில் விபத்து சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது, இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் களூவஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க பட்டிருப்பு உள்வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து களூவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, களுதாவளை கடற்கரை வீதியிலும் முச்சக்கர வண்டி ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்து மேற்படி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.