நாடாளுமன்ற அதிகாரிகள் 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

நாடாளுமன்ற கொரோனா பரவலை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள், பணியாளர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் நாடாளுமன்ற அதிகாரிகள் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்றும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் சிலர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் சகலரும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் எனச் சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேர் பரிசோதனைகளில் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது நேற்று வெளிவந்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுடன் நாடாளுமன்ற பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன்படி நேற்று 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.